
இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்களுக்கு இடையேயான அரசியல் கலந்தாய்வுகளின் ஆரம்பச் சுற்று, 2026 ஜூலை 09 அன்று உஸ்பெகிஸ்தானின் டஷ்கென்ட்டில் நடைபெற்றது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால, நட்புறவில் குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கிறது.
இரு அமைச்சுக்களுக்கு இடையே வழக்கமான இருதரப்பு உரையாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கானதொரு முறையான கட்டமைப்பை நிறுவுவதற்கானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டதன் மூலம் இக்கலந்தாய்வுகள் ஆரம்பமாகின. பரஸ்பர ஆர்வம்கொண்ட துறைகளில் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்தவும், நிறுவன ரீதியான இணைப்புகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளின் பகிரப்பட்ட ஈடுபாட்டை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டுச் செயலாளர் அருணி ரணராஜவும், உஸ்பெக் தரப்பின் தூதுக்குழுவிற்கு உஸ்பெகிஸ்தான் குடியரசின் வெளிநாட்டு அலுவல்களுக்கான முதல் பிரதி அமைச்சர் அலோயேவ் பக்ரொமும் தலைமை தாங்கினர்.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கிய இணைப்பொன்றாக உஸ்பெகிஸ்தானின் மூலோபாய அமைவிடம், அதன் தொடர்ச்சியான பொருளாதார மாற்றம், மற்றும் பிராந்திய இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அதன் அதிகரித்து வரும் பங்களிப்பு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், மத்திய ஆசியப் பிராந்தியத்துடன், குறிப்பாக உஸ்பெகிஸ்தானுடன் தனது ஈடுபாட்டை விரிவுபடுத்துவதில் இலங்கையின் வலுவான ஆர்வத்தை வெளிநாட்டுச் செயலாளர் ரணராஜ வலியுறுத்தினார். இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்யவும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான புதிய வழிமுறைகளை இனங்காணவும் இந்த ஆலோசனைகள் முக்கியமானதொரு தளத்தை வழங்கின.
இக்கலந்துரையாடல்களின் போது, வர்த்தகம், சுற்றுலா, ஏற்பாட்டியல் மற்றும் கல்வி ஆகிய துறைகள் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட முக்கியத் துறைகளாக இரு தரப்பினராலும் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இருதரப்பு வர்த்தகத்தைப் பன்முகப்படுத்தவும், வர்த்தக அளவை அதிகரிப்பதற்கும், பரஸ்பரரீதியில் பயனளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்குமான அவசியத்தை இரு தூதுக்குழுக்களும் வலியுறுத்தின.
கல்வி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிநாட்டுச் செயலாளர் ரணராஜ, இத்துறையில் இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே உள்ள வலுவான வரலாற்றுத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டினார். மேலும், பல இலங்கை மாணவர்கள், குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில், உஸ்பெகிஸ்தான் உட்பட முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்றுள்ளனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் கல்விசார் கூட்டாண்மைகளுக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்துவதன் பெறுமதியை அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கணிசமான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதோடு, உஸ்பெகிஸ்தானிலிருந்து இலங்கைக்குப் பருவகால சிறப்பு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டமையானது, அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எளிதாக்கி, மக்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்தும் ஒரு நேர்மறையானதொரு முன்னேற்றமாக அமைந்தமையை பெரிதும் வரவேற்றனர். இது தொடர்பாக, 2026 செப்டம்பரில் நடைபெறவுள்ள மத்திய ஆசியாவின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான டஷ்கென்ட் சர்வதேச சுற்றுலாக் கண்காட்சியில் பங்கேற்க இலங்கை சுற்றுலாத்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசியல் கலந்தாய்வுகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டுச் செயலாளர் ரணராஜ, உஸ்பெகிஸ்தான் குடியரசின் முதலீடு, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் ஷொக்ருக் கே. குலாமோவுடன் கலந்துரையாடினார். இதில், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், பல்வகைப்படுத்தவும் இலக்கு சார்ந்ததும், நடைமுறைக்கு ஏற்றதுமான நடவடிக்கைகளை வகுக்க இரு தரப்பினரும் இணங்கினர். ஆடை உற்பத்தி, தேயிலை பொதியிடல், கடல் உணவு ஏற்றுமதி, மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
விளையாட்டு, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் மேலும் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக, வெளிநாட்டுச் செயலாளர் ரணராஜ, உஸ்பெகிஸ்தான் குடியரசின் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஆவாஸ் கரிமோவ், உஸ்பெகிஸ்தான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவரும், ஆலோசகருமான கலாநிதி அலிஷர் ஷெய்கோவ் மற்றும் உஸ்பெகிஸ்தான் சுற்றுலாக் குழுவின் பிரதித் தலைவர் சண்ட்ஜர் டட்ஜீவ் ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொண்டார்.
தொடர்ச்சியான உரையாடலைப் பேணுவதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தங்களின் பகிரப்பட்ட ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், 2027-ஆம் ஆண்டில் கொழும்பில் இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளைக் கூட்டுவதற்கு இரு தரப்பினரும் இணக்கியதைத் தொடர்ந்து இக்கலந்தாய்வுகள் நிறைவடைந்தன.
இலங்கைத் தூதுக்குழுவில், தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ மற்றும் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் மிஹிராவி திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஜூலை 13







